பச்சை தொப்பி !
ஒரு வேப்பமரம் ,சில தென்னைமரங்கள், கொஞ்சம் பூச்செடிகள் பிரமாதமான காய்கறித் தோட்டம் என ஒரு கனவு இல்லத்துக்கு அநேகமாக சென்னையில் வாய்ப்பே இல்லை . ஆணால் ,இந்த கான்கிரீட் காட்டிலும் காய்கறிகளைப் பயிரிட முடியும் என்கிறார் இந்திரகுமார் .
பம்மல் அருகே உள்ள சங்கர் நகரில் தன் வீட்டு மொட்டை மாடியில் கத்தரி, வெண்டை, மிளகாய், மூலிகைச் செடிகள் என விதவிதமாகப் பயிரிட்டு ஆச்சர்யப்படவைக்கிறார்.
''இந்த வீடு 800 சதுர அடிகள்தான். மொட்டை மாடி முழுக்க, காய்கறி, மூலிகை, பூச்செடிகளை வளர்க்கிறேன். எங்க குடும்பத் தேவை போக, மிச்சம் இருக்கும் காய்கறிகளை அக்கம் பக்கத்தினருக்கு வழங்குகிறேன். குளியலறை, கழிவறை, சமையல் அறைகளில் இருந்து வெளியேறும் நீரில் ரசாயனங்கள் கலந்து இருக்கும் என்பதால், அதை அப்படியே செடிகளுக்குப் பாய்ச்சுவது இல்லை. இந்த நீரை எளிய முறையில் சுத்திகரிக்க, மூன்று அடி நீளம், அகலம், ஆழம் உள்ள ஒரு சிமென்ட் தொட்டியை அமைத்தேன். அதில், மணல், கருங்கல் ஜல்லி போன்றவற்றைப் பாதி அளவுக்கு நிரப்பி, கல்வாழை, சேப்பங்கிழங்கு போன்றவற்றை நடவு செய்தால், ஜல்லியில் உருவாகும் பாசியில் உள்ள பாக்டீரியாக்கள், குளியல் அறை நீரில் உள்ள பாஸ்பேட், சோடியம் உப்புகளைத் தின்றுவிடும். இப்படி சுத்திகரிக்கப்பட்ட நீரைப் பாய்ச்சினால், செடிகள் ஜோராக வளரும்!'' என்றவர் அடுத்து சொன்ன விஷயம் ஆச்சர்யப்படுத்தியது.
'மனிதக் கழிவுகளைச் சிதைக்க, கப்பல், விமானங்களில் பயன்படுத்தப்படும் 'பேசிலஸ்' என்ற நன்மை செய்யும் பாக்டீரியாவை செப்டிக் டேங்கில் கொட்டிவிட வேண்டும். ஒரு வாரத்தில் தீமை செய்யும் பாக்டீரியாக்களை, இந்த
பேசிலஸ் உண்டுவிடுவதால், டேங்க்கில் வெறும் தண்ணீர் மட்டும்தான் இருக்கும். இதன் மூலம் செப்டிக் டேங்க்கைச் சுத்தம் செய்யும் வேலையும் இல்லை. செடி, கொடிகளுக்குத் தண்ணீரும் கிடைக்கும். இந்த 'பேசிலஸ் பாக்டீரியா’ குதிரை சாணத்தில் இருந்துதான் பிரித்து எடுக்கப்படுகிறது. இந்த பாக்டீரியா கிடைக் காதவர்கள், குதிரை சாணத் தையேகூட நேரடியாகப் பயன்படுத்தலாம். இந்த பாக்டீரியாக்கள் சம்பளம் வாங்காத சுத்திகரிப்புத் தொழிலாளர்கள்'' என்று சொல்லும் இந்திரகுமார், அடுத்து விளக்கிய ஆச்சர்யம்... இயற்கை ஏ.சி.
''1983-ல் பெங்களூரு அறிவியல் மையத்தில் இங்கிலாந்து கட்டடக் கலை வல்லுநர்கள், ஏ.சி. இல்லாத கட்டடம் கட்டித் தந்தனர். 'இந்தத் தொழில்நுட்பத்தை எங்கு கற்றீர்கள்?’ என்று கேட்டதற்கு 'உங்கள் ஊர் கோயில் கோபுரம், அரண்மனை டூம்களைப் பார்த்துதான்!’ என்றார்களாம் அந்த வல்லுநர்கள். நம் தொழில்நுட்பத்தை, நமக்கே திருப்பிக் கொடுத்த அவர்களுக்கு, அன்று வழங்கப்பட்ட சம்பளம்...
27 லட்சம்!

இதைக் கேள்விப்பட்ட நான், 'நாம் வீடு கட்டும்போது, இயற்கை ஏ.சி. வைத்துதான் கட்ட வேண்டும்’ என்று முடிவு செய்தேன். இது, விமான நிலையப் பகுதி என்பதால், ஒரு மாடிக்கு மேல் கட்ட அனுமதி இல்லை. எனவே ஒரு மாடி கட்டி அதன் மீது இந்த இயற்கை ஏ.சி-யை அமைத்து உள்ளேன். மொட்டை மாடியில், நீளம், அகலம், உயரம் அனைத்தும் நான்கு அடி உள்ள கான்கிரீட் கூரையை அடிப் பாகத்தில் அரை அடி இடைவெளிவிட்டு அமைக்க வேண்டும். இந்த இடைவெளி வழியாகக் காற்று கான்கிரீட் கூரைக்கு உள்ளே புகுந்து வீட்டுக்குள் செல்வதால் வீடு எப்போதும் குளுமையாக இருக்கும். இந்தக் கூரையின் மீது கண்ணாடி பதித்தால் வீடும் வெளிச்சமாக இருக்கும். இதைக் கட்டுவதற்கு, 15 ஆயிரம் ரூபாய்தான் செலவானது. கரன்ட் பில் எகிறாமல் வீடு ஜில்லுனு இருக்கே!'' என்று வழிகாட்டுகிறார் இந்திரகுமார்.
No comments:
Post a Comment